
ஊஞ்சல்கள் வானத்துக்கும் பூமிக்கும் உண்டான தூரத்தை அளந்து கொண்டிருக்கின்றன. அளவிட முடியாத தூரத்தில் வானம் இருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் வாயடைத்துப் போகும் வகையில் ஊஞ்சல் அளவைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. வானம் பரப்பியிருக்கும் பகல் சுருண்டு, கீழே விழுகின்ற போதிலும் ஊஞ்சலில் அளப்பது மட்டும் நிறுத்தப்படுவதே இல்லை.
ஊஞ்சலுக்கும் எனக்குமான தொடர்பு ஒரு குறியீடைப் போன்றது. எந்த கேள்வி பதிலுக்கும் அடங்காமல் தனித்து நிற்பது. ஆடி மாதம் ஊஞ்சல் மாதம் எனும் பெயரெடுக்கும் வகையில் பெரிய மரம் உள்ள எல்லோருடைய வீட்டிலும் ஊஞ்சல் தொங்கவிடப்பட்டிருக்கும். என் பழையவீட்டின் முன்னே தனித்து பெருத்து இருக்கும் அந்த பெயர் தெரியா மரத்தின் கிளைகளின் விளிம்பு வரை சென்று ஊஞ்சல் கயிறைக் கட்டியிருக்கிறேன். மரம் ஏறத் தெரிந்தவனுக்கு, ஊஞ்சல் ஆடுவது மட்டும் ஏனோ பயம் இருந்தது. ஊஞ்சலாடும் எல்லைக்கு அப்பால் சென்று வானில் கலந்துவிடுவேனோ என்ற இனம்புரியாத அச்சம் கலந்திருந்தது.
வானுக்குச் சென்றவர்கள் மீளுவதில்லை என்று என் தந்தை சொல்லியிருக்கிறார். வானுக்குச் செல்லும் முன் நம்மை யாவரும் வணங்க வேண்டும் என்ற கோட்பாட்டின் விளைவுகளாக விளைந்த அவ்வார்த்தை என் மனதின் எல்லா துளைகளிலும் அமர்ந்து கொண்டு பயமுறுத்தியது.
எந்த ஆடிப் பொழுதுகளிலும் ஊஞ்சல் கயிற்றில் அமர்ந்ததே இல்லை. ஒருவேளை ஞாபகம் அறியாத வயதில் யாரோ ஒரு பெண்ணின் மடியில் அமர்ந்து ஆடிக் கொண்டிருக்கலாம். ஆனால் அதே சமயம் அவர்களை உந்தி விடுவது எனக்குப் பிடித்திருந்தது. பெண்கள் இருபுறமும் கயிறைப் பிடித்து தலை சாய்த்து ஆடும் பொழுது குற்றம் செய்யவந்தவனும் கும்பிட்டுச் செல்வான். ஆடி முடிந்ததும் ஆடலும் முடிகிறது. ஊஞ்சல் கயிறுகள் கிணற்றில் தண்ணீர் இறைக்கவும், பரணில் படுத்துறங்கவும் பழகிக் கொண்டன. ஆனால் என்னுடைய நெடுநாள் கேள்விகளும் உள்நிறைந்த மாற்றங்களும் ஊஞ்சல் கயிறினுள்ளும் ஒளிந்திருப்பது அவைகளுக்கு மட்டும்ந்தான் தெரியுமோ என்னவோ?
அந்த பூங்காவினுள் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட ஊஞ்சல்கள் தொங்கிக் கொண்டிருந்தன.அவை நன்கு உறுதியான கம்பிகளால் பிணைக்கப்பட்டு மரப்பலகை பொருத்தப்பட்டு இருந்தன. அவைகளின் இருபுறமும் சாயம் வெளுத்த இரும்புத் தூணை நட்ட வைத்திருந்தார்கள். ஊஞ்சலில் ஆடுபவர்கள் கீழே விழுந்தாலும் காயம் ஏதும் ஏற்படாமல் இருக்க, மணலைப் பரப்பியிருந்தார்கள். ஊஞ்சல் நிலையாக இருக்கும் இடத்திற்கு நேர்கீழே மட்டும் உந்துவதால் ஏற்படும் குழி இருந்தது. எங்கள் வீட்டு ஊஞ்சல்களுக்கு அடியில் எவ்வித பாதுகாப்பும் இல்லாதது குறித்து நினைத்துக் கொள்வேன்.
ஊஞ்சல்களில் ஆடும் சிறுமிகளையும், அதைத் தள்ளிவிடும் தோழிகளையும் பார்க்கும் பொழுது, அவர்களின் கவலைகள், தொல்லைகள் எல்லாம் எங்கே சென்றன என்று வியப்பு ஏற்படும். ஊஞ்சலாடும் ஆசை என் மனதின் துளையில் எங்கேனும் மிச்சமிருந்ததோ என்னவோ, நானும் ஆடவேண்டும் என்ற ஆசை கொண்டேன். ஊஞ்சலாடும் சிறுமிகளை ரசிப்பது எவ்வளவு இனிமையோ அதனைக் காட்டிலும் இருமடங்கு நாம் ஊஞ்சலாடுவதில் இருக்கும் என்று என் சகோதரிகள் கூறியது நினைவுக்கு வந்தது. நான் மெல்ல அருகே சென்று ஊஞ்சலைத் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தேன். வாய்ப்பு கிடைத்தால் நாமும் அமரலாம் என்ற நப்பாசை அதனுள் கலந்திருந்தது.
ஊஞ்சல்கள் எப்படி மனிதனின் மனதைக் கரைத்து இன்பத்தைக் கொண்டு வருகின்றன? சட்டெனும் நாழிகைகளில் குழந்தையாவதற்குண்டான தருணத்தை அதனால் எப்படி ஏற்படுத்தித் தரமுடிகிறது? பருவ மங்கைகளின் வாழ்வில் இடையிறாது கலந்துவிட்ட ஊஞ்சல்கள் வானம் தொடும் பொழுதெல்லாம் வசப்படுத்துகிறதா என்ன?
அன்று அந்த ஊஞ்சல் பெண்ணைப் பார்த்திருக்கவில்லையெனில் நான் இன்று எழுதியிருக்கவேண்டிய அவசியமே இல்லை. அவள் எப்படி இருந்தாள் என்கிற ஞாபகம் ஏதும் தற்சமயம் என்னிடமில்லை. என் வயதை ஒத்து இருந்தாள். மெல்லிய நிறத்தில் சட்டையும் பாவாடையும் அணிந்திருந்தாள். பார்வை குறைபாட்டினால் கண்ணாடி ஒன்றை அணிந்திருக்கவேண்டும்.. அவளது கண்ணுக்கும் காதுக்கும் இடையே ஆடியின் கால் அழுந்திய தழும்பு இருந்தது. நன்கு சிவந்த முகத்தைக் கொண்ட பேரழகியாக விளங்கினாள். பூங்காக்களில் தேவதைகள் நுழைவது ஒன்றும் முக்கியச் செய்தி அல்ல. ஆனால் பூங்காவினுள் நுழையும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் அது மிக முக்கிய செய்தி.. பருவ வயதினுள் நுழைந்திருந்த என்னை இனக்கவர்ச்சி எனும் மாயை துரத்தியது. அவளை நான் ரசித்துக் கொண்டிருந்தேன். அவளின் புற அழகு என்னை என்னிடமிருந்து பிரித்திருந்தது. வைத்த விழி அவளிடமே இருக்க, அவள் என்னைத் துளியும் பார்க்காதது என் துர்பாக்கியமாகக் கருதினேன்..
எனக்கான ஊஞ்சலாடும் தருணம் வந்தது. ஊஞ்சல் பலகை தேய்ந்து விரிசலுற்றிருந்தது. சிறுமிகளே அதில் அமர்ந்தாடும் பொழுது நாம் வாலிபம் நிறைந்தவன் தானே ஆடுவோமே என்று மெல்ல மெல்ல உந்தி இருபக்கமும் பறந்தேன். கைகள் ஆரம்பத்தில் நடுங்கினாலும் செல்லச் செல்ல அதன் தீவிரம் குறைந்து சகஜமானது. ஊஞ்சல் தரும் இன்பத்தை இத்தனை நாள் நான் ஏன் அனுபவிக்காமலேயே போய்விட்டேன்? காலம் திரும்பிச் சுற்றி, வயதைக் குறைக்காதா என்று முதல்முறையாக பேராசை கொண்டேன்..அந்த பெண்ணின் அழகை விட, ஊஞ்சல் தந்த இன்பம் என்னைக் குதூகலிக்கச் செய்தது. கிட்டத்தட்ட அதுதான் எனது முதல் அனுபவம் என்றும் கூறிவிட முடியாது. அந்த ஊஞ்சல் பெண் நான் ஆடிக் கொண்டிருந்த ஊஞ்சலை நோக்கி வந்தாள். அவள் கண்களில் இருந்த மிரட்சியும் என் பருவ தாகமும் இணைந்து கொண்டன. ஊஞ்சல் கயிறின் அலைவேகம் குறைந்து கொண்டே போனது. என்னருகே வந்தவள், சட்டென்று என்னை இழுத்து மணலுக்குள் தள்ளினாள்.. பரப்பியிருந்த மணலுக்குள் விழுந்தபடியால் எனக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.. எந்த வித கட்டுப்பாடுமில்லாமல் பறக்கும் பறவையைப் போன்று அவள் ஊஞ்சலில் ஆடத் துவங்கினாள்.
அவளது செய்கை எனக்கு வியப்பைத் தந்தாலும் என்னால் வேறேதும் யோசிக்க முடியவில்லை,... ஒருவேளை வாலிபர்கள் ஊஞ்சலாடக்கூடாதோ என்ற எண்ணம் சட்டென்று வந்தது.. என் வயதொத்த அவள் ஆடும் பொழுது ஏன் அந்த உரிமை ஆணுக்கு இருக்கக் கூடாது? என்றாலும் அவள் ஆடும் அழகை ரசித்துக் கொண்டு அருகே உள்ள மரத்தினில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தேன். அவளது ஆட்டத்தினில் என் கண்கள் அவளது கிழிந்த சட்டையின்மேல் தன் பார்வையை செலுத்தியது.
அவளது கையும் மார்பும் இணையும் இடத்தில் மார்பருகே சட்டை கிழிந்திருந்தது. அவள் எப்படி அதை கவனிக்காமல் அணிந்து வந்தாள்.. பெண்களின் முன்னெச்சரிக்கைகளைக் கண்டு நான் பலமுறை வியந்ததுண்டு. அதிலும் மானம் என்பது பெண்களுக்கு மட்டுமே உயிருக்கும் மேலானதாக கருதி வந்தேன். அவள் ஏன் தெரியாமல் அதை அணிந்திருக்கவேண்டும்?/
அந்த பெண்ணின் தந்தை ஊஞ்சல் மரத்தினருகே வந்தார். இத்தனை நேரம் எங்கிருந்தாரோ தெரியவில்லை ; தன் பெண்ணின் நிலையைக் கண்டவரைப் போன்று அவளை ஊஞ்சலாடுவதிலிருந்து நிறுத்தி விடாப்பிடியாக அழைத்துச் சென்றார். அவர் தன் மகளின் கிழிந்த ஆடையை கவனித்திருக்கலாம்... ஆனால் அதை சரிசெய்ய அவரால் ஏனோ எதையும் செய்யமுடியவில்லை. தந்தை மகள் போராட்டத்தினிடையே எனக்கு உரைத்தது, அப்பெண்ணுக்கு மனநிலை சரியில்லாமல் இருக்கிறது என்பது. அதுகூட யூகம் தான் என்றாலும் அவளின் நடத்தை, வயது, அலட்சியம் ஆகியவற்றைக் கவனிக்கும் பொழுது அந்த முடிவுக்கு வந்தேன்..
மெதுவாக என் பாதங்கள் ஊஞ்சல் மரம் விட்டு விலகத் தொடங்கின. எனது குற்ற உணர்ச்சி முற்களாக அலங்கரிக்கப்பட்டு என்னைச் சுற்றிலும் குத்திக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு இருந்தது. நான் ஏன் அவளிடம் போய் உன் ஆடை கிழிந்திருக்கிறது என்று சொல்லவில்லை.... அல்லது நான் சொல்ல விரும்பாமல் ரசிக்கத் தூண்டப்பட்டேனா.. அறியாமை உண்டாக்குவதைக் காட்டிலும் அறியாமையை அறிந்தும் உதாசீனப்படுத்துவதே தவறு என்பது எனக்கு ஏனோ புரியவில்லை.
தூரத்தில் அப்பெண் அழுதுகொண்டே அவள் தந்தையின் பின்னால் செல்வது தெரிந்தது நான் யாருடைய முகத்திலும் விழிப்பதற்கில்லை என்று வேகமாக பூங்காவை விட்டு வெளியேறினேன்.. அதன் பிறகு அப்பெண்ணை நான் பார்க்கவே இல்லை. அப்பெண் தற்போது குணமாகியிருப்பாளா.. அல்லது என்னைப் போன்றே யாரையும் தள்ளிவிடுவாளா... யாருக்கேனும் கிழிந்த ஆடையைக் காட்டி காமத்தை உமிழச் செய்வாளா..
பூங்காவை விட்டு வெளியே வந்தபின்னர் ஊஞ்சல்மரத்தைத் திரும்பிப் பார்த்தேன்.. அப்பொழுது சிறுமிகள் ஆடிக் கொண்டிருந்தார்கள் வானுக்கும் மண்ணுக்குமாய்...
0 comments:
Post a Comment