Monday, March 30, 2009

காதலிக்க நேரமுண்டு

ஒரு நிமிஷம் அபியென மெல்லிய தாய் ஒலித்த குரல் கேட்டு திரும்பினாள் அபி.

அவளின் முகம் பார்த்த நிலையில் அடுத்த வார்த்தை வராதவனாய் அப்படியே ஸ்தம்பித்து மௌனமாய் சில நொடிகள் நின்றான் சத்யா!

ஏன் அபி, என்னை நீ என்னைக்கும் புரிஞ்சுக்க மாட்டியா, நா . உன்னை உண்மையிலே நா மனசார விரும்புறேன். என் மனசு எல்லாம் நீ தானியிருக்கிறாய்.

நீ மட்டும் எனக்கு கிடைக்கலைன்னா நா கண்டிப்பா சூசைட் பண்ணிக்குவேன் அதில எந்தவித மாற்றமும் இல்லையென அவன் பேசியதில் கண்களில் ஒருவித வெறி தெரிந்தது.

ஒரு நிமிடம் அபி ஆடி போய் விட்டாள். உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்காயென்னா? இப்படி கண்டபடி பேசற.

நீ நல்ல பையன் தான். அழகாகவும் அடக்கமாகவும் தானிருக்கிற. ஆனா, நீ சின்ன கிராமத்துல பொறந்தாலும் பல மைல் தூரமுள்ள பக்கத்து ஊருக்கு கஷ்டப்பட்டு பல நாட்கள் நடந்தே ஸ்கூலுக்குப் போயி நல்லபடியா 12 வது வகுப்பு வரை விடாத முயற்சியோடு படிச்சு முதல் மாணவனா எக்ஸாம்ல வெற்றி பெற்று வந்திருக்கிற.

உன்னுடைய கஷ்டத்தோட பலனா நல்ல மார்க்குபெற்று காலேஜ் அட்மிஷன் கிடைச்சிருச்சு என்ன, என்னை அப்படி ஆச்சர்யமா பாக்குற. எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்ன்னு யோசிக்கிற அப்படித்தானே அவளின் கேள்விக்கு அவன் தலையசைத்தான் ஆமாம்யென்பது போல்.

பற்கள் பளிச்சிட அவள் சிரித்தாள். இதெல்லாம் பர்ஸ்ட் டே நாம காலேஜ×க்கு வந்தன்னைக்கு நாம நம்மளை அறிமுகப்படுத்திக்கிட்டப்போ நீ சொன்னது. இதுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு யோசிக்கிறியா, இருக்கு? உன்னுடைய குடும்பம் ஏழைக் குடும்பமாயிருந்தாலும் உன்னை எப்படியாவது ஒரு பட்டதாரியா ஆக்கிடணும்னு உங்கப்பாவும் அம்மாவும் வயக்காட்ல வெயில் மழைன்னு பாக்காம உடம்பை கூட சரியா கவனிச்சுக்காம உழைச்சு ஓடாய் ஒவ்வொரு நாளும் தேஞ்சுக்கிட்டு இருக்காங்க. ஒண்ணுக்கு பத்தா வட்டிக்கு கடன் வாங்கியாவது உனக்கு எப்படியாவது ஒரு நல்ல வாழ்க்கைப்பாதையை அமைக்க தங்களோட சுய கவுரவத்தை யும், உயிருக்கும் மேலான குடும்ப மானத்தையும் அடமானம் வைக்கிறாங்க.

அண்ணன் படிச்சு வந்து நல்ல வேலைக்கு போயி கைநிறைய சம்பாரிச்சு தனக்காக வரன் தேடி தன்னை வாழ வைப்பான்னு கல்யாணக் கனவு கண்டுக்கொண்டிருப்பாள் உன் தங்கை. இப்படிப்பட்ட ஆசைகளை அழிக்கப் போகும். இந்த காதலை நான் ஏற்கவா சொல்லு சத்யா...

நாம இப்பதான் காலேஜ் வாசலை அடியெடுத்து வச்சிருக்கிறோம். அதுக்குள்ள நமக்கு இந்த காதல் தேவையா? காதல் வேண்டாம்ன்னு சொல்லலை ஆனா அது இப்ப வேணாம். உன்னை பெத்தவங்களுடைய ஆசையையும் எதிர்பார்ப்பையும் இந்த காதலால இழந்து விடாதே! திரும்ப பெற முடியாது.

கடமையை நிறைவேற்ற நல்லா படி சத்யா. நல்ல மார்க். வாங்கி ரேங்க் ஹோல்டரா வா. அப்புறம் நல்ல வேலையை தேடிக்கிட்டு எல்லா கடமையையும் நிறைவேத்திட்டு வா! அப்ப நம்ம காதல் பற்றி பேசுவோம் என இத்தனை நாள் மனதில் பூட்டி வைத்திருந்த எண்ணத்தை வெளிப்படுத்திய நிறைவோடு தோளிலிருந்து இறங்க காத்திருந்த துப்பட்டாவை புத்தகங்களை பிடித்திருந்த இரு கரங்களின் ஒன்றில் அதனை தோளுக்கே உயர்த்தி அவனுடைய பதிலுக்கு காத்திராமல் நடை போட்டாள் அவள்.

சத்யா கிளாஸை விட்டு வெளியேறிய புரொபசரை நோக்கி நடையில் வேகத்தை கூட்டினான். நடையில் மட்டுமல்ல மனதிலும். தவற விட்ட முன் பீரியடை பற்றிய குறிப்பு வாங்க!

0 comments:

Post a Comment

கவிதை © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates