Friday, March 27, 2009

கருமியின் மனைவி

ஒரு தேசத்தில் ஒரு உலக மகாக் கஞ்சன் தன் குடும்பத்துடன் வசித்து வந்தான். அவனுக்கு பணத்தின் மேல் கொள்ளை ஆசை.

உலக மகாக் கருமி அவன். வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கிடைத்த பணம் அனைத்தையும் பத்திரப்படுத்தி வந்தான்.

அவன் சாகும் தருவாயில் தன் மனைவியிடம் சொன்னான் - “நான் இறந்த பிறகு, எனது வாழ்நாளில் நான் சம்பாதித்த அத்தனை பணத்தையும் உடன் எடுத்துச் செல்ல விரும்புகிறேன். ஆதலால் அனைத்துப் பணத்தையும் ஒரு சிறு பெட்டியில் போட்டு எனது சவப்பெட்டிக்குள்ளேயே வைத்துவிடவும்.”.

இவ்வாறு செய்தே தீரவேண்டும் என தனது மனைவியிடம் உறுதிமொழியும் சத்தியமும் பெற்றுவிட்டான். மனைவியும் கணவன் மேல் உள்ள பாசத்தினால் சத்தியமும் செய்துவிட்டாள்.

அவனும் அவன் நினைத்தமாதிரியே விரைவில் இறந்துவிட்டான்.
அனைத்து மதச்சடங்குகளும் முடிந்தபிறகு சவப்பெட்டியை மூடத் தயாராகினர். அந்த நேரத்தில் துக்கத்துக்கான கருப்பு நிற ஆடை அணிந்த அவனது மனைவியானவள் ஒரு சிறிய கையடக்கப் பெட்டியைக் கொண்டு வந்தாள். “ஒரு நிமிடம். பெட்டியை மூடாதீங்க. இதை உள்ளே வைச்சுருங்க”

அவள் கொடுத்த சிறிய பெட்டியை கருமியுடன் வைத்துச் சவப்பெட்டியை மூடிவிட்டனர்.
பின் ஒரு வழியாக அவனுடைய சவ அடக்கமும் முடிந்தது.

அவன் மனைவியின் நண்பி ஒருத்தி வந்தாள். “ஏண்டி உனக்கு எதாவது அறிவிருக்கா?. அவந்தான் ஒரு கூறுகெட்ட மனுசன். பணம் பணம்னு அழைஞ்சான். பத்துக் காசு செலவழிக்காம எல்லாத்தையும் மூட்டை கட்டி வைச்சு அழகு பாத்தான். செத்தபிறகாவது நிம்மதியா இருக்க விடாம. எல்லாப்பணத்தையும் தன்னுடன் எடுத்துப் போகணும்னு சத்தியம் கேட்டான். சத்தியத்தைப் பண்ணிப்புட்டு இப்போ எல்லாத்தையும் பொட்டியில போட்டு அவங்கிட்டயே கொடுத்திட்டியே” என்றாள்.

மனைவி சொன்னாள் - “என் கணவர் எவ்வளவு மகாக் கருமியா இருந்தாலும், அவர் மேலே எனக்குக் கொள்ளைப் பிரியம். என் மனசு முழுவதும் நிறைந்திருப்பவர் அவர். அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்றாவிட்டால் எனது கட்டை வேகாது. அவர் விருப்பத்துக்கு இணங்கி அவருடைய பணத்தையெல்லாம் அவருடனேயே வைத்துவிட்டேன்”.

“என்னடி சொல்றே. எல்லாப் பணத்தையும் அவனோட அனுப்பிட்டியா?!@#$$%%^#”

“ஆமாம். அப்படித்தான் செய்தேன்”. “அவருடைய பணம் எல்லாத்தையும் எனது வங்கிக் கணக்குக்கு மாற்றிவிட்டு, அவருடைய பெயருக்கு ஒரு செக் எழுதி அந்த செக்கை ஒரு சிறு பெட்டியில் வைத்து அவருடன் அனுப்பிவிட்டேன். அவரால் அந்தச் செக்கைப் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள இயலுமெனில் மாற்றிக்கொண்டு செலவழிக்கட்டுமே” - என்றாள் மனைவி.

0 comments:

Post a Comment

கவிதை © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates