Friday, March 27, 2009

மிஸ்டர். எக்ஸின் அப்பாவித்தனம்

மிஸ்டர். எக்ஸ் ஒரு Super Market ல் பொருட்களை வாங்குவதற்காக சென்றார். ஒவ்வொரு பொருட்களாக எடுத்துக் கூடைக்குள் போட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவர் மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு - “யாரோ என்னையே வெகு நேரமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்”.

அவர் யூகம் சரிதான். அவரையே ஒரு மூதாட்டி தொடர்ந்துகொண்டிருந்தாள்.

ஆனால் அவர் அந்த மூதாட்டியைப் பற்றிக் கவலையின்றி தனக்குத் தேவையான ஒவ்வொரு பொருட்களையும் சேகரித்துக்கொண்டிருந்தார்.

எல்லாம் முடிந்ததும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, பணம் கட்டும் இடத்துக்கு விரைந்தார்.

அதற்குள்ளாக அந்த வயதான மூதாட்டி அவருக்குக் குறுக்கே வந்து நின்றாள்.

“மன்னிக்கவும். நான் உன்னையேதான் வெகு நேரமாக உற்று நோக்கிக்கொண்டிருந்தேன். அதை நீயுமே உணர்ந்திருப்பாய். ஒரு சாயலுக்கு நீ எனது மகனைப் போல இருக்கிறாய். அவன் இப்போது வெளிநாட்டில் இருக்கிறான். வருடம் ஒருமுறை தான் இங்கே வருகிறான். உன்னைப் பார்த்ததில் எனக்கு ஒரு சந்தோசம் கிடைத்தது. அதனால் தான் நீண்ட நேரம் உன்னையே உற்றுப்பார்த்தேன்.” - என்றாள்.

“எனக்கு ரொம்ப வெட்கமாக இருந்தது”, என்ற மிஸ்டர். எக்ஸ், “அம்மா உங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமெனில் கேளுங்கள்” என்றார்.

“ஆமாம் மகனே. நான் இங்கே இருந்து வெளியே செல்லும்போது, போய் வாருங்கள் அம்மா! என உன் வாயால் சொல்ல இயலுமா?”.

“சரி”.

வயதான மூதாட்டியும் Super Market (பல்பொருள் அங்காடி) யை விட்டுக் கிளம்பி வெளியே சென்றாள்.

முன்கூட்டியே திட்டமிட்டபடி நம் மிஸ்டர். எக்ஸும் “போய் வாருங்கள் அம்மா” எனக் கூறி மூதாட்டியைப் பார்த்துக் கையசைத்தார்.

பின் ஒரு வழியாக பணம் செலுத்தும் இடத்திற்குச் சென்றார். அங்கே அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் செலுத்தவேண்டிய மொத்தத்தொகையாக 8500 ரூபாய்க்கு ரசீது கொடுத்தார்கள். ஆனால் அவர் வாங்கிய பொருட்களின் விலையோ வெறும் 300 ரூபாய் மட்டுமே.

அவர் பணம் கட்டுபவரிடம் முறையிட்டான். “அக்கா. நான் வாங்கிய பொருட்களின் மொத்த விலை 300 ரூபாய்தானே. ஏன் 8500 ரூபாய்க்கு bill கொடுத்திருக்கீங்க”.

“உங்க அம்மாதான் சொன்னாங்க. அவங்களுக்கும் நீங்களே பணம் கொடுத்துடுவீங்கன்னு. நீங்ககூட போய் வாருங்கள் அம்மான்னு சத்தமா சொல்லி கையைக் காண்பிச்சீங்களே.”.

நல்ல வேலை Credit Card கொண்டு சென்றதால் மிஸ்டர். எக்ஸ் தப்பித்தார்.

நீதி : யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

0 comments:

Post a Comment

கவிதை © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates