Saturday, April 4, 2009

பழைய புத்தகம்.



மீண்டும் ஜெஸிகாவை பின் தொடருகிறேன். ஜெஸியைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பப்படுபவர்கள், தெரிந்துகொள்ளாமலே இருப்பதுதான் நல்லது. ஒருமுறை நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே, அதை அளவில் அளக்கமுடியாது ;

பனி மயக்கும் மார்கழி கோலங்களைச் சிதைத்தவாறே வண்டியை நிறுத்தி, அவசராவசரமாக என் அறைக்குள் நுழைந்தேன்.. ஏன் என்கிறீர்களா?, 'அவளை' பார்த்தேன்.. அவளா? அவள் யார் என்று கேட்கிறீர்களா?, இப்போது சொல்லமாட்டேன், இந்த விசயம் ஜெஸிகாவுக்குத் தெரியாது. தெரிந்தால் அவள் பத்ரகாளி ஆகிவிடுவாள். சரி விட்ட இடத்தில் தொடருகிறேன், அவள் என்னிடம் கொடுத்து வைத்திருந்த ஒரு பழைய நோட்டு என் அறையின் வலது மூலையில்.... ஆங்.. இல்லையில்லை, இடது மூலையில் தேமேயென்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரும்பு அலமாரியில் ஜெஸியின் புடவைகளுக்கு மத்தியில் இருக்கிறது..

என்ன தைரியம்? 'அவளுடைய' புத்தகம் ஜெஸியின் புடவைகளுக்கு மத்தியில் இருந்தால் ஜெஸி கவனிக்காமல் இருக்கமாட்டாளா... ம்ஹூம்.... இப்பொழுதெல்லாம் அதிகம் ஜீன்ஸ் டாப்ஸ் அணிவதால் எப்போதாவது உடுத்தும் புடவைகளுக்கு மத்தியில் வைப்பதுதான் பிரச்சனை இல்லாதது.. மேலும் அவள் உடுத்தும் புடவை எது என்று தேர்ந்தெடுப்பதும் நானே!! நூறுசத பாதுகாப்பு..

திரும்பவும் விட்ட இடத்திற்கு வருகிறேன். அந்த பழைய நோட்டில் அவள் எனக்காக எழுதிக் கொடுத்த கவிதைகள் இருந்தது.. கவிதைகள் என்பது சாதாரணமானவை அல்ல, அவை மறைந்து போயிருந்த ஞாபகக் கிடங்கை திறக்க வல்லவை. ஒரு கவிதை படித்தால், தலைசுற்றும், இன்னொன்று, மூக்கு சிவக்கும், அட, இன்னொன்று சிரிக்க வைக்கும். அவள் பல பரிமாணங்கள் தொட்டு எழுதக் கூடியவள்.

திடீரென்று படித்துக் கொண்டிருக்கும்பொழுதே, ஜெஸியும் வந்துவிட்டாள்.. என்ன செய்வது?? சிறிது நேரம் என்னை நான் அவளிடம் தொலைத்துக் கொண்டிருக்கும் பொழுது, என்னிடம் தொலைந்தவள் என்னைத் தொலைக்க வந்தாள். சட்டென்று மூடிய அந்த பழைய புத்தகத்தை கவனிக்காமல், என்மீது ஒரு கிறங்கப் பார்வை வீசிவிட்டு, இடைவெளியேதுமின்றி தழுவினாள்.. அவள் மந்தகார தழுவலில் அந்த பழைய நோட்டு நொறுங்கிப் போயிருந்தது...


இனி, இக்கதை பற்றிய என் கருத்து அல்லது கவிதை :

வெளிக்காட்டாமல் அடங்கியிருந்த
மெளனப்படலத்தைக் கிழித்து
நீர்த் திரை கோர்த்து
எனக்குள்ளான வாயிலில்
காத்துக்கிடந்தது
உன் பழைய கவிதைகள்

நீண்டும் குறுகியுமிருந்த
அதன் வடிவங்களையும்
படிம விவாதங்களைத் தாங்கி நிற்கும்
வார்த்தையினடி கோடுகளையும்
என்னுள் அடர்ந்து வளர்ந்திருந்த
மொழியை சுண்டியெழுப்பியது

பெரும் இருளில் பயணித்து
எங்கோ ஒரு புள்ளியில் மறைந்து போன
நம் முதல் முத்தத்தை
உன் பழைய கவிதையொன்று
நினைவாறாமல் கூறிற்று

நான் என்ற தொடர்பு முதல்
கண்ணீர் என்ற முடிவு வரையிலும்
அங்குல அங்குலமாக
அடுக்கி வைக்கப்பட்டிருந்தது
கவிதை எனும் பலகையினூடு

ஒற்றைச் சாளர வழிதிறந்து
அறை நிரப்பிய காற்றாய்
அருகிருந்த மனைவி என்னை
இருக்கினாள்

தவறவிட்ட உன் பழைய புத்தகம்
கைக்ககப்படாத தூரத்தில்
பயணித்துக் கொண்டிருந்தது.

0 comments:

Post a Comment

கவிதை © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates