Saturday, April 4, 2009

பொய்கள்...

நானாகத் துரத்தவில்லை – உன்னால்
தூக்கமிழப்பதாய்ச் சொல்லி
துயர்கொள்ளவில்லை

வாழ்வும் சாவும் உன்
வாய்ச்சொல்லில்தானென்று உன்னைப்
பேச்சிழக்கச் செய்யவில்லை

பிறந்தநாள் வாழ்த்தெழுதி அதைப்
பிரித்துப் படிக்கச்சொல்லி- உன்னை நான்
நிர்ப்பந்திக்கவில்லை

நீ போகும் பாதை பார்த்து
நீண்டநேரம் காவல்காத்து உன்
வீடுவரை தொடரவில்லை

நீ கிழித்தெறிந்த காகிதத்தை
நெஞ்சின்மேல் ஒட்டிக்கொண்டு
நித்திரை செய்ததில்லை

நினைவுகளில், கனவுகளில்
நீதானடியென்று
கவிதை சொன்னதில்லை

எழுதிமுடித்த பேனாக்கள் - உன்
எச்சில்பட்ட முடிந்துபோன
'ஐஸ்'கிறீம் குவளைகள்
உதறியதில் வீழ்ந்த
உன்னுடுப்புப் பொத்தான்களென்று
எதையும் நான் சேகரித்ததில்லை

நீ பார்க்க வேண்டுமென்று
யாருக்கும் பிச்சை போட்டதில்லை

நீ சிரிக்க வேண்டுமென்று
சில்லறை ஜோக் அடித்ததில்லை

நீயாக வந்து பேசியபோதும்
நானாக எதையும் சொன்னதில்லை

உனக்குப் பிடிக்குமென்பதற்காய்
உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டு
ஒத்துப்போனதாய்க் காட்டியதில்லை

இப்போது கூட இதையெழுதியது
உனக்காக இல்லை.

0 comments:

Post a Comment

கவிதை © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates